மட்டக்களப்பு கல்லடியில் கடை உடைக்கப்பட்டு கொள்ளை

கல்லடி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டள்ளது.

கல்லடி மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையமே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையத்தில் இருந்த சுமார் இரண்டரை இலட்சத்திற்கும் அதிகமான பொருட்களும் 20ஆயிரம் ரூபா பணமும் குறித்த வர்த்தக நிலையதில் இருந்து கொள்ளையிட்டுச்செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் கூரையினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் இந்த கொள்ளையினை நடாத்தியுள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதிக்கு சென்ற காத்தான்குடி பொலிஸாரும் தடவியல் குற்ற தடுப்பு பிரிவினரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.