பிரசாந்தி ஞாபகார்த்த கிண்ணத்தை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அணி வென்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச  முன்னால் இளைஞர் சேவை அலுவலர்  அமரத்துவமடைந்த திருமதி பிரசாந்தி பிரியதர்ஷன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண கிறிக்கட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அணி.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மகிழுர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட அணிக்கு பதினொருவர் கொண்ட, பத்து ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கற் சுற்றுத் தொடரில் திருகோணமலை மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன அணிகள் மோதிக்கொண்டன.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு ஒன்று ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றிபெற்று கிண்ணத்தை கைப்பற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெற்றிபெற்ற அணிக்கான கிண்ணம் மறைந்த இளைஞர் சேவை அலுவலரின் குடும்ப உறவினர்களால் வழங்கி வைக்கப்பட்டதோடு, இரண்டாவது இடத்தினை பெற்ற திருகோணமலை அணிக்கான கிண்ணம் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜேசுதாசன் கலாராணி அவர்களினாலும், ஆட்டநாயகனுக்கான கிண்ணம் திருகோணமலை இளைஞர் சேவை அதிகாரிகளான ஜனாப்.ஜிவ்றி, ஜனாப் றிஸ்வி ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டது.

பரிசளிப்பு நிகழ்வில் தேசிய சம்மேளன பிரதிநிதிகளான ரி.விமல்ராஷ், ந.திவாகர்  மாவட்ட சம்மேளன நிருவாகிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.