மட்டக்களப்பு கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய சூழல் உள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு கட்டிடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை ஆலய முன்றிலில் நடாத்தினர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மிகவும் இயற்கை எழில்கொண்ட பகுதியாகவும் 300 வருடங்கள் பழமையான ஆலயத்தினையும் கொண்டதாக கொத்துக்குளம் மாரியம்மன் ஆலயம் இருந்துவருகின்றது.
ஆலயத்தின் அழகினையும் புனித தன்மையினையும் பாதுகாக்கும் பகுதியாக ஆலயத்தினை சூழவுள்ள வயல் பிரதேசம் இருக்கின்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஆலய நிர்வாகத்தினர்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வயல்காணிகளை மூடுவதற்கு அரசாங்கம் தடைகளை விதித்துள்ள போதிலும் அவற்றினையெல்லாம் மீறிய வகையில் குறித்த பகுதியில் வயல்காணி மூடப்பட்டு கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2000ஆம் ஆண்டு 46ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் அடிப்படையில் விவசாய காணிகள் விவசாய நடவடிக்கைகள் தவிர்ந்த ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணியை நிரப்புவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த காணி நிரப்பப்படுமானால் அப்பகுதியில் உள்ள ஏனைய விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்றதாகவும் இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லையெனவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும் கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய பரிபாலனசபை தலைவர் எஸ்.ருவிகரன் தெரிவித்தார்.

வயல்காணிகளை நிரப்பி அந்த காணிகளை மாற்று இனங்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையாக இது இருக்கலாம் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான மகஜர் ஒன்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.