கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்கள் மட்டக்களப்பில் மாபெரும் பேரணி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தினர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்சில் சர்வதேச விசாரணையினை வலிறுத்தியும் அரசாங்கத்தினை அதற்கு ஆதரவு வழங்குமாறு கோரியும் இந்த பேரணி நடாத்தப்பட்டது.

இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 700க்கும் மேற்பட்ட காணாமல்போனவர்களின் உறவுகள் கலந்துகொண்டனர்.

கைகளில் தமது காணாமல்போனவர்களின் படங்களை ஏந்தியவாறு கண்ணீருடன் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.

காணாமல்போனவர்களை கண்டறியும் அலுவலகம் அமைக்கபடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அந்த அலுவலகத்தில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அமர்த்தப்படும்போது அதன் பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விசாரணைகள் சர்வதேச கண்காணிப்பாளர்களினால் மேற்கொள்ளப்படும்போதே அதன் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படும் எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தமக்கான குரல்கொடுக்கவேண்டியவர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் தாங்கள் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலையிருப்பதாகவும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள் அரசே அனைத்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கும் நீயே பொறுப்பு கூறவேண்டும்,சிறைச்சாலைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்து,மரணச்சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்,சர்வதேசமே எமக்காக குரல்கொடு அதற்காக அழுத்தம் கொடு,எமது உறவுகளை வலிந்து காணாமல் ஆக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும்,எனதுமகன் எங்கே,எனது அப்பா எங்கே,காணமல்ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினை திறந்துசர்வதேசத்தினை ஏமாற்றாதே போன்ற பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியில் கலந்துகொண்டனர்.

பேரணியானது கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி ஊர்வலமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது.அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் மகஜர் கையளிக்கப்பட்டது.

இந்த பேரணியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,இணையத்தின் பிரதிநிதிகள்,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு காரணமானவர்கள் இன்று சுதந்திரமாக திரியும்போது தாங்கள் தமது பிள்ளைகளை தேடி வீதிகளில் போராடிவரும் நிலையிருப்பதாகவும் இங்கு பெற்றோர் கவலை தெரிவித்தனர்.

தமது பிள்ளைகள் இ;ன்னும் எங்காவது மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என தாம் இன்னும் நம்புவதாகவும் தமது பிள்ளைகளை ஜனாதிபதி அவர்கள் கண்டுபிடித்துதரவேண்டம் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.