மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனை

யேசு கிறிஸ்துவின் பிறப்பின் மகிமையினை வெளிப்படுத்தும் வகையிலான விசேட ஆராதனைகள் நாடளாவிய ரீதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிறிஸ்தவ மக்களின் பிரதான ஆராதனை நிகழ்வுகள் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

இதன்போது யேசு கிறிஸ்துவின் பிறப்பினைக்குறிக்கும் வகையிலாக அமைக்கப்பட்டிருந்த மாட்டுத்தொழுவம் ஆயரினால் திறந்துவைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து யேசு கிறிஸ்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையிலான ஆராதனைகள் நடைபெற்றன.இந்த ஆராதனை நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஏ.தேவதாசன் அடிகளார் உட்பட அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர்.

அத்துடன் ஜேயசுவின் பிறப்பினை வரவேற்கும் வகையில் கரோல் கீதங்களும் இங்கு இசைக்கப்பட்டதுடன் ஆயரினால் ஆசிர்வாதங்களும் வழங்கப்பட்டன.
இந்த ஆராதனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயத்தில் 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் ஆராதனையின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் ஆயுததாரிகளினால் சுட்;டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.