மட்டக்களப்பில் 27 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட காணி

1990ஆம் ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு தரப்பினரின் முகாமாக இருந்துவந்த சுவாமி ராம்தாஸ் நிறுவனத்திற்கு (கருணாலயம்) சொந்தமான காணி  பொலீஸ் திணைக்களத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீள ஒப்படைக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த தனியார் காணி பாதுகாப்பு தரப்பினரால் முகாமாக பயன்படுத்தப்பட்டுவந்தது.

இந்த நிலையில் மயிலம்பாவெளியில் சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) 2006 காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் பொழுதே இக்காணியில் இராணுவம் நிலைகொண்டிருந்தது.

அதன் பின்பு 2009 காலப்பகுதியில் இராணுவம் வெளியேறிய நிலையில், பொலீஸ் திணைக்களம் இக்காணியை பொறுப்பெடுத்தது (03 ஏக்கர். 2013 காலப்பகுதி முதல் இக்காவலரணை மீள ஒப்படைக்குமாறு சுவாமி ராம்தாஸ் நிறுவனம் (கருணாயலயம்) பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இது சம்பந்தமாக மேன்மை தங்கிய ஐனாதிபதி, அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள  அதிகாரிகள், தேசிய பொலீஸ் ஆணைக்குழு, மனிதஉரிமைகள் ஆணைக்குழு என்பவற்றிற்கும் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது.

முற்றிலும் எதிர்பார்க்காத நிலையில் 2016 கார்த்திகை மாதம் சட்டமும் ஒழுங்கும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இக்காணியை சுவிகரிப்பதற்கு, வரவு செலவு திட்ட திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீட்டை கோரியிருந்த செய்தியை தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கையின் பிரகாரம் அறிய முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 31.12.2017 அன்று சுவிகரிப்பு நடவடிக்கையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி குறிப்பிட்ட பொலீஸ் காவலரண் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஞா.சிறிநேசன் (பா.உ), வியாழேந்திரன் (பா.உ), திரு.கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் இவ்விடயத்தை கோவிந்தன் கருணாகரன் தொடர்ச்சியாக பிரஸ்தாபித்து வந்தது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் 13.12.2017 அன்று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் ஐனாதிபதி செயலகத்திற்கு நேரடியாகச் சென்று, இவ்விடயத்தின் தொடர்ச்சியான இழுத்தடிப்பு நடவடிக்கைகள் பற்றி சுட்டிக்காட்டி 31.12.2017 க்கு முன் இக்காணியை விடுவிக்க ஆவண செய்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இதற்கு அமைவாக இன்று காலை று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

இந்த காணியை மீள பெறுவதற்கு குரல்கொடுத்த அரசியல்வாதிகள் மற்றும் பொது அமைப்புகளுக்கும் இந்த காணியை மீள வழங்குவதற்கு  உடனடியாக நடவடிக்கையெடுத்த ஜனாதிபதிக்கும் று சுவாமி ராம்தாஸ் நிறுவன (கருணாலயம்) முகாமையாளர் இரா.முருகதாஸ் இதன்போது நன்றி தெரிவித்தார்.