மட்டக்களப்பில் கொள்ளையர் குழு சிக்கியது -கூழாவடியில் கோழிக்கடையில் திருட்டு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடுகளை கொள்ளையிட்ட குழுவினர் முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்யப்பட்டதுடன் கோழி விற்பனைக்கடையொன்றும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மட்;டக்களப்பு அமிர்தகழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வளர்க்கப்பட்டுவந்த உயர்ரக ஆடுகள் இரண்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

இந்த நிலையில் சீ.சீ.ரிவி கமராவில் குறித்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து குறித்த முச்சக்கர வண்டியும் ஆடுகளும் மீட்க்கப்பட்டது.

இது தொடர்பில் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி உட்பட சவளக்கடையை சேர்ந்த இருவரும் வெல்லாவெளியை சேர்ந்த தமிழர் ஒருவருமாக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி டிஹகவத்துற தெரிவித்தார்.

இதேவேளை மட்டக்களப்பு கூழாவடி பிரதான வீதியில் உள்ள கோழி விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 29 கோழிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவுள்ள மின்குமிழ்கள் கழட்டப்பட்டு நிலையத்தின் முன்கதவு உடைக்கப்பட்டு அதன் ஊடாக கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.