கோபுவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு –மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

ஊடக வரலாற்றில்  எஸ்.எம்.கோபாலரத்தினம்  அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது

இலங்கையின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஊடகப் போராளி எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திரிகை உலகில் அறிமுகமான மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது இரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அமரர் கோபாலரத்தினம் அவர்களின் மறைவு குறித்த இரங்கள் செய்தியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.


இலங்கையின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஊடகப் போராளி எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் அறிமுகமான மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம்  அவர்கள்  இன்று காலமானார் .


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்படமாக தற்போது கொண்டிருந்த கோபாலரத்தினம் அவர்கள்  1950களில் வீரகேசரியில் இணைந்து தனது பத்திரிகை தொழிலை ஆரம்பித்தார்.


அதன் பின்னர் 1956களில் ஈழநாடு பத்திரிகையில் இணைந்து பின்னர் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார்.

 கோபாலரத்தினம் அவர்களின் காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதுடன்  பல்வேறு ஆபத்தான காலகட்டங்களில் அதில் பணியாற்றியிருந்தார்.


1981ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்ட போது அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார்.


ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை என்ற நூலின் ஊடாக அந்த சிறை அனுபவங்களை தொடராக எழுதினார். அதனை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் ஆலோசகராகவும் அவர்  கடமையாற்றினார்.
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களான கானமயில்நாதன், திருச்செல்வம், குகநாதன், கந்தசாமி, அனந்த பாலகிட்ணர் என பல பத்திரிகையாளர்களை செதுக்கிய பெருமை எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களையே சாரும்.


2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக இருந்து அச்சங்கத்தை வழிநடத்தினார்.

நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் உயிர் இன்று பிரிந்து விட்டது. அன்னாரின்  ஆத்மசாந்தி அடைய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பாக இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
இவரது பிரிவு துயரில் வாடிநிற்கும் அன்னாரின்  குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது