காத்தான்குடியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தேன் போத்தல்கள் மட்டக்களப்பு நகரில் மீட்பு

மட்டக்களப்பு நகரில் இன்று வியாழக்கிழமை காலை (02)போலி தேன் போத்தல்களை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம்  இருந்து போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு தொகை தேன்போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையம் ஊடாக இந்த தேன் போத்தல்கள் கொண்டுவரப்பட்டபோது அப்பகுதியில் சுகாதார சோதனைகளில் ஈடுபட்டிருந்த பொது சுகாதார பரிசோதகரினால் இந்த போலி தேன் விற்பனை முறியடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் இருந்து இந்த தேன் போலி தேன் போத்தல்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இதன்போது 15 போலியாக தயாரிக்கப்பட்ட தேன் போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த தேன் போத்தல்கள் மிகவும் சூட்சுமமான முறையில் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.

குறித்த தேன்போத்தலில் மேற்பகுதியில் உண்மையான தேன் வைக்கப்பட்டுகீழ் பகுதியில் சீனிப்பாகு வைக்கப்பட்டுள்ளதாகவும்அதனை மேலோட்டமாக பரிசோதிக்கும்போது உண்மையான தேன் என்பதையே காட்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.