மட்டக்களப்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் மரணம் -சவப்பெட்டியுடன் கவன ஈர்ப்பு ஊர்வலம்

தாய்மையடையும் பெண்கள் பல்வேறு கனவுகளுடன் வைத்தியசாலைகளுக்கு பிரசவத்திற்காக செல்கின்றனர். வைத்தியசாலையில் இடம்பெறும் அசமந்த போக்குகள் அந்த கனவினையே கலைத்துவிடுகின்றது.அவ்வாறான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

மட்டக்கள்ப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் சடலமாக வீட்டுக்கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.இதற்கு எதிராகவும் வைத்திய சேவையினை முறையாக முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் விசித்திரமான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

கறுப்பு துணியை அணிந்தவாறு சடலம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு குறித்த பெண் உயிரிழந்த வைத்தியசாலைக்கு முன்பாக கொண்டுவரப்பட்டு அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டதை தொடர்ந்து சடலம் ஊர்வலமாக கள்ளியங்காடு பொதுமயானத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நான்காம் குறுக்கு வீதியை சேர்ந்த 45வயதுடைய திருமதி லதாசிறி சிவகுமார் என்னும் பெண் பிரசவத்திற்காக மட்டக்களப்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதனை செய்து பின்னர் சத்திரசிகிச்சை செய்யவேண்டும் எனக்கூறி சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவித்துள்ளார்.

பிரசவத்தின் பின்னர் வைத்தியசாலையின் அறையொன்றுக்குள் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த தாயின் உடம்பில் மாற்றங்கள் ஏற்பட்டபோது அது தொடர்பில் வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவித்தனர்.

அங்கு கடமையில் இருந்த வைத்தியர்களும் தாதியர்களும் குறித்த பெண் தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் சத்திரசிகிச்சை செய்யும்போது ஆபத்து ஏற்பட்டாள் அதற்கான தீவிர சிகிச்சைகளை செய்வதற்கான உரிய வசதிகள் அந்த தனியார் வைத்தியசாலையில் காணப்படவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

சாதாரணமாக கதைத்துக்கொண்டிருந்த குறித்த தாய் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டபோது அங்கிருந்த தாதியரினால் சுவாசநோய் என்று கூறப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அதுவரையில் எந்த வைத்தியரும் வரவில்லையெனவும் மூச்சுத்திணறல் அதிகரித்தபோதே வைத்தியர் வந்து சோதித்துவிட்டு பரபரப்பான முறையில் மருத்துவம் வழங்கிய நிலையில் அங்குவந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் கூறியுள்ளார்.

குறித்த பெண் அதிகாலை 2.45க்கு மிகமோசமான நிலைக்கு சென்ற நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டுசெல்லுமாறு மகப்பேற்று வைத்திய நிபுணரால் பணிக்கப்பட்ட நிலையில் காலை 4.30மணிக்கு பின்னரே அம்பியுலன்ஸ் கொண்டுவரப்பட்டு குறித்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது அது மாரடைப்பினால் ஏற்படவில்லை,குழந்தை பிரசவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின்போது ஏற்பட்ட தவறு காரணமாக இரத்தகுழாய் ஒன்றில் ஏற்பட்ட இரத்தக்கசிவே காரணம் என கண்டறியப்பட்டதாகவும் அது தொடர்பில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் மரணத்தில் தங்களுக்கு பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் குறித்த பெண்ணை தாங்கள் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறியபோது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பல தடைகளுக்கு மத்தியில் நீதிமன்றில் அனுமதி பெற்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டதாக உயிரிழந்தவரின் கணவரான சிவகுமார் தெரிவித்தார்.’

இதபோன்ற சம்பங்கள் இனிவரும் காலங்களில் யாருக்கும் நடக்ககூடாது என்பதற்காக இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.