சட்ட விரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்பட்ட இடம் முற்றுகை

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின்  செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் நீண்டகாலமாக சட்ட விரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைசெய்யப்பட்ட இடம் (06) புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட  மதுவரித்திணைக்களத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரி எஸ் .குகநேசனுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள பிரதி பொறுப்பதிகாரி  பி . செல்வகுமார்  தலைமையிலான குழுவினரினால்  களுவன்கேணி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  கசிப்பு விற்பனை மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட  இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்  கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட   இருவர் பிணையில் விடுதலை  செய்யப்பட்டுள்ளதுடன் .குறித்த இருவர் எதிராக எதிர்வரும் 13 ஆம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றில் சட்ட  நடவடிக்கைக்காக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக  மாவட்ட மதுவரி திணைக்கள பிரதி   பொறுப்பதிகாரி பி . செல்வகுமார்  தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்களத்தினால்  கடந்த 8 மாத காலப்பகுதியில் களுவன்கேணி , வாழைச்சேனை , ஏறாவூர் , வாகரை ஆகிய சுற்றுலா நீதிமன்ற பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சட்ட விரோத கசிப்பு விற்பனை ,சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்ட விரோத மது ,பியர் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பில் 495 சட்ட விரோத குற்ற செயல்கள் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி  பி . செல்வகுமார் மேலும் தெரிவித்தார்.