கிழக்கு பல்கலைக்கழகம் மீண்டும் நாளை ஆரம்பம்

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்குப் பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை 19ஆம் திகதி ஆரம்பமாகுமென்று கிழக்குப் பல்கலைக்கழக பிரதி  உப வேந்தர் வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவித்தார்.

 ஆகையினால் குறிப்பிட்ட இறுதியாண்டு மாணவர்கள் திங்கட்கிழமை 18ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு வந்து விட வேண்டும் என்றும் நிருவாகம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை முதலாமமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு ஆகிய அனைத்து ஆண்டுகளையும் சேர்ந்த மாணவர்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் ஒக்ரோபெர் 02ஆம் திகதி ஆரம்பமாகுமென்றும் அவர் கூறினார்.

கிழக்குப் பல்கலைக் கழகம் வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த 3 மாதங்களாக இடம்பெற்றுவந்த அசாதாரண சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் கடந்த 08.09.2017 அன்று கிழக்குப் பல்கலைக்கழகப் பேரவை, மத்தியஸ்த குழு மற்றும் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தையின் விளைவாக அனைத்துத் தரப்பினரும் தீர்மான அடிப்படையில் முடிவை எட்டியதையடுத்து மீண்டும் பல்கலைக் கழகம் கல்வி நடவடிக்கைகளுக்காக தற்போது திறக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில்;  அசாதாரண நிலைமை தீவிரமடைந்ததையடுத்து அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டு அனைத்து பீட மாணவர்களும் அப்பல்கலைக்கழகத்திலிருந்து 18.08.2017 அன்று நண்பகலுடன்  வெளியேற வேண்டும் என்ற உத்தரவு பிறப்pக்கப்பட்டிருந்ததாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் ஏ.எல். ஜவ்பர் சாதிக் தெரிவித்;தார்.

அதன் பின்னர் பல்கலைக் கழகம் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தற்போது திறக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.