சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கொடியேற்றத் திருவிழா


கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற முருகன் பேராலயங்களுள் சிறப்பு புகழ்பெற்றதும் வரலாற்று தொன்மைகொண்ட சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த மகோற்சவ முருகனின் பெருவிழா நேற்று(22) செவ்வாய் கிழமை ப்ரம்மோற்வ பிரதம குரு சிவஸ்ரீ கைலாசநாத வாமதேவக் குருக்கள், ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ உலகநாத புஸ்பராஜ் குருக்கள் தலைமையில் சிறப்பான முறையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.


ஆலயத்தின் கொடியேற்ற உற்சவத்திற்கு பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் மிகவும் சிறப்பான முறையில் பக்திபூர்வமாக சித்தாண்டி வேலவனின் கொடியேற்றம் இடம்பெற்றது.

இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை  ஆரம்பமான எம்பெருமானர் மகோற்சவமானது உற்சவ காலங்களில் எதிர்வரும் அடுத்த மாதம் 03 திகதியில் இருந்து 05ம் திகதி வரையான உற்சவமானது இக்கோயிலின் தெய்வீக சிறப்பம்சத்தை பண்டைய காலம்தொட்டு இற்றைவரை போற்றி வழிபட்டு விழாவெடுக்கும் மயில்கட்டுத் திருவிழா உற்சவம் இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் உற்சவ காலங்களில் குடிவாரியான திருவிழா முறைமையின்படி ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் விசேட திருவிழாக்கள் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் திருவிழா மகோற்சமானது 16 நாட்களைக் கொண்ட உசவப் பெருவிழாவாக இடம்பெறவுள்ளது.

சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் வருடாந்த உற்சவ மகோற்சவப் பெருவிழா காலங்களில் ஆலயத்தில் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய குடிமக்களின் நெறிப்படுத்தலின்கீழ் பக்திசார் கலை நிகழ்வுகள் ஆன்மீகம்சார் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ சித்திர வேலாயுதரின் இறுதி நாள் தீர்த்தோற்சவமானது எதிர்வரும் செப்டம்பர் 06ம் திகதி புதன் கிழமை சித்தாண்டி  உதயன்மூலையில் அமைந்துள்ள சரவணப் பொய்கையின் பிரணவத் தீர்த்தத்துடன் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா நிறைவடையவுள்ளது.