தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளது -இரா.சம்பந்தன்

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வெளிவரும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிதானமாக செல்லவேண்டிய தேவையுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன்போது கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தினார்.

மட்டக்களப்புக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தி எதிர்க்கட்சி தலைவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தினர்.

தமிழரசுக்கட்சியின் தலைமைக்காரியாலத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,கிழக்கு மாகாணசபையின் பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா,அம்பாறை மாவட்ட உறுப்பினர் இராஜேஸ்வரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் புதிய அரசியலமைப்பு,கிழக்கு மாகாணத்தின் இன்றைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எதிர்க்கட்சி தலைவர் தெளிவுபடுத்தினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய,

தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்ற புதிய அரசியலமைப்பு சாசனம் அதில் உள்ளடங்கியிருக்கின்ற அரசியல் தீர்வு சம்பந்தமாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கருமங்கள், அதை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள், அது ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற விடயங்கள் தமிழ் மக்களை பொறுத்தவரை ஒரு அரசியல் தீர்விற்கான அத்தியாவசிய தேவை, நாட்டை பொறுத்தவரையில் ஒரு புதிய அரசியல் சாசனத்தின் அத்தியாவசிய தேவை இந்த கருமத்தை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிருந்த நாட்கள், புதிய அரசியல் சாசனம், அதிகாரப்பகிர்வு உட்பட அதனுடைய வரைபு வெளிவரும் வரையில் நாங்கள் பக்குவமாகவும் நிதானமாகவும் எங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. இது பற்றிய விளக்கங்களை கொடுத்து அதன் பின்னர் அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறினோம்.

அத்துடன் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற காணிப்பிரச்சனைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகள் கல்வியறிவு, மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு, தொழில்வாய்ப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் அதில் ஏற்படுகின்ற தாமதங்கள் பற்றியும் கலந்துரையாடினோம்.

சந்திப்பு மிகவும் சுமுகமாக நடந்தது. மக்கள் ஓரளவிற்கு கருமங்கள் பற்றி புரிந்துகொண்டிருக்கின்றார்கள். புதிய அரசியல் சாசனத்தின் நகல் வரைபு, விஷேடமாக அதிகாரப் பகிர்வு ஆவணி மாதத்தில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதன் பின்னர் இடைக்கால வரைபு, இறுதி வரைபு வெளிவந்த பின்னர் நாங்கள் மாவட்ட ரீதியாக தொகுதி ரீதியாக மக்களை சந்தித்து அது பற்றி விளக்கி மக்களின் கருத்துகளை அறிந்த பின்னர் தான் முடிவுகளை எடுப்போம்.

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் முறைமை சம்பந்தமாக அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அறிகின்றோம். இது ஒரு கலப்பு முறைத் தேர்தலாக இருக்கும். தொகுதி ரீதியாகவும் விகிதாசார ரீதியாகவும் இது நடத்தப்படும்.

கலப்பு முறைத் தேர்தலாக இருந்தால் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு காலம் தேவைப்படும். அரசாங்கம் இறுதி முடிவை அறிவித்த பின்பு தான் அந்த விடயம் சம்பந்தமாக கருத்துகளை கூற முடியும். மக்களை தேர்தலுக்கு ஆயத்தமாக இருக்கும்படியும் கொள்கை அடிப்படையில் செயற்படும்படியும் நாங்கள் மக்களை கேட்டிருக்கின்றோம்.
புதிய அரசியல் சாசனத்தின் வாயிலாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழல் இருக்கின்றது. அவ்விதமாக ஒரு அரசியல் தீர்வு ஏற்பட்டால் மக்களுக்கு திருப்திகரமான தீர்வாக அது அமையுமாக இருந்தால் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை மாகாண சபைகளுக்கு இருக்கின்றது.

அது முக்கியமானதொரு பொறுப்பாகும். அதனை கையாளக்கூடிய வகையில் அனைவரையும் தயாராக இருக்குமாறு நாங்கள் கேட்டிருக்கின்றோம்.