பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஆடி அமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் கருதப்படுகின்றது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயம் மூர்த்தி,தீர்த்தம்,தலம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட வரலாற்றுசிறப்புமிக்க தலமாக இதுவிளங்கிவருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த பத்து தினங்களாக நடைபெற்றுவந்ததுடன் நேற்று சனிக்கிழமை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் வழிபாட்டுடன் கிரியைகள் ஆரம்பமாகி தம்ப பூஜை நடைபெற்று திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சிவன் பார்வதியுடன் மாமாங்கேஸ்வரர் உள்வீதியுலா வந்து எருது வாகனத்தில் தீர்த்தக்கரையினை நோக்கி சென்றார்.

மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் விசேட பூஜையுடன் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீர்த்தோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.