முராவோடை பாடசாலை காணி அபகரிப்பினை கண்டித்து கொதித்தெழுந்த பெற்றோரும் மாணவர்களும் கண்டுகொள்ளாது அரசியல்வாதிகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலகத்திற்குப்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலயத்திற்குரிய விளையாட்டு மைதானத்திற்குரிய காணியை பிரிதொரு நபர்கள் அபகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வித்தியாலய மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (18) செவ்வாய்க் கிழமை காலை ஈடுபட்டனர்.

கடந்த 8 மாதங்களாக பாடசாலைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் பிரதேசத்திலுள்ள தமிழ் மக்களின் காணிகள் இப்பகுதியலுள்ள சிலரால் அத்துமீறி பிடிக்கப்பட்டு வந்த நிலையில் எவராலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் பாடசாலைக் காணியும் அத்துமீறி பிடிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முறாவோடை பிரதேசம் தமிழர்களின் பாரம்பரிய பகுதியாகவும் இப்பகுதியில் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் தமது பகுதிகளில் இவ்வாறான அத்துமீறிய குடியேற்றங்கள் செய்யப்படுவதாக இப்பகுதி தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆலயங்களுக்கு அருகில் இறைச்சிக்கழிவுகள் வீசப்படுவதுடன் ஆலயங்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ளச்செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் இப்பகுதி இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ளவர்களில் சிலர் மாணவிகள் பெண்கள், பாடசாலைக்கும் வேறு தேவைகளுக்கும் வீதியால் செல்லும்போது பாலியல் தொல்லைகளை வழங்குவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்களுக்கும் அறிவித்தும் தொடர்ச்சியாக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்பாக இப்பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் உரியவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் மட்டும் தமது பகுதிக்கு வருவதாகவும் பிரச்சினையை தீர்த்துவைப்பவதாகவும் வெற்றிபெற்றவுடன் தமது பகுதியை எட்டியும் பார்ப்பதில்லையெனவும் கவலை தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்த்திற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரெட்ண தேரர் குறித்த இடத்திற்கு வருகைதந்திருந்தார்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய தேரர் இதுதொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பத்து தினங்களுக்குள் குறித்த பாடசாலை மைதானத்திற்குள் அத்துமீறிய குடியேற்றங்களை நான் அகற்றித் தருவேன் என உறுதியளித்தார்.

“நாங்கள் விளையாட எங்கள் மைதானம் தேவை, வேலியை அகற்றும் வரை போராட்டத்தை தொடர்வோம், எங்கள் மைதானம் எங்களுக்குத் தேவை, வெளியேறு வெளியேறு எங்கள் மைதானத்தை விட்டு வெளியேறு, அகற்று அகற்று வேலியை அகற்று” போன்ற பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு எந்த அதிகாரியும் வருகைதராதது கவலைக்குரிய விடயமாகும்.