கல்லடி பாலத்தின் கீழ் பகுதியில் மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாய்ந்த மாணவனின் சடலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று காலை காலை கல்லடியில் உள்ள சிவானந்தா தேசிய பாடசாலையில் கணித பிரிவில் கற்றுவரும் அம்பிளாந்துறை,நாகமுனையை சேர்ந்த 17வயதுடைய க.பவனுஷன் என்னும் மாணவன் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளான்.

பாடசாலைக்கு செல்வதாக கூறி பாடசாலை சீருடையுடன் வந்த குறித்த மாணவன் பாலத்தில் புத்தகப்பையினையும் சைக்கிளையும் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளான்.

இதனைக்கண்டவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் பொலிஸார் கடற்படையினருக்கு அறிவித்து அங்குவிரைந்த கடற்படையினர் படகுகள் மூலம் தேடுதல் மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் குறித்த மாணவனின் சடலம் இன்று காலை கல்லடி பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலத்தினை மீட்டுள்ள காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.