சித்தாண்டியிலுள்ள சிகண்டி பவுண்டேசன் கல்வியினை வளர்ப்பதில் ஆர்வம்

சித்தாண்டியிலுள்ள சிகண்டி பவுண்டேசன் அமைப்பானது தமிழரினதும், தமிழ் மாணவர்களினதும் கலைப்பண்பாடுகளையும் கல்வியினையும் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருவதாக ஜி.ஸ்ரீநேசன் பா.உ ஊடகங்களுக்கு கருத்துரைத்தார்.

 அந்த வகையில் மேற்படி அமைப்பின் முக்கியஸ்தர் திரு.மகேந்திரன், திரு.முரளிதரன் ஆகியோரின் அழைப்பின் பேரில், குறித்த அமைப்பின் நிலையத்திற்குத் தரிசிப்பினை 04.06.2017 அன்று மேற்கொண்டிருந்தேன். அங்கு செல்லும் போது இசை, நடனம், நாட்டுக்கூத்து போன்றவற்றுக்கான பயிற்சிகள் பயிற்றுனர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இளம் பயிலுனர்கள் மிகவும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். சிகண்டி அமைப்பினர் உரிய மேற்பார்வைகளை செய்தவண்ணம் இருந்தனர்.

அதேவேளை ‘சித்தாண்டியிலுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியில் எழுச்சி ஏற்பட வேண்டும்’. என சிகண்டி அமைப்பினர் கருத்துக்களை பகிர்ந்தனர். தமது கிராமத்திலுள்ள பாடசாலையின் கா.பொ.தர சாதாரன அடைவுமட்டம் 22வீதமாக உள்ளதாகவும் கவலைப்பட்டனர். இதனை உயர்த்துவதற்குக் கிராம இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் அவர்களை ஒருங்கிணைத்து செயற்படுவதில் முன்னோடிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். வரலாற்று புகழ்பெற்ற மத்திய மகா வித்தியாலயம் தனது பழைய சாதனைகளை படைக்க வேண்டும். என்றும் ஆர்வம் காட்டினர்.

புதிய வலயக்கல்வி பணிப்பாளரின் வருகையோடு கல்குடா வலயப்பாடசாலைகள் புத்தெழுச்சி பெறவேண்டும். என்றும் அதற்காக சகலரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று ஜி.ஸ்ரீநேசன் கருத்துரைத்தார். எதிர்காலத்தில் ‘சிகண்டி பவுண்டேசனுக்கு’ வேண்டிய உதவிகளை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை, தனவந்தர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருக்க வேண்டும் என்றும் பா.உ குறிப்பிட்டார்.

கல்விக்கான முதலீடு என்பது நீண்ட காலத்திற்குரியதாகும். அந்த முதலீட்டின் மூலமாக நிலைத்து நிற்கக்கூடிய சமூகப் பொருளாதார அபிவிருத்தியை அடைய முடியும். எனவே கற்போம் கற்பிப்போம் கல்வியால் உயர்வோம் நிலையான அபிவிருத்தியினை எய்துவோம், என்றும் கருத்துத் தெரிவித்தார்.