சிறுமிகள் துஸ்பிரயோகத்தினை கண்டித்து இளைஞர்களினால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை,மல்லைகைத்தீவில் மூன்று சிறுமியர்கள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடாத்தினர்.

சிறுமியர்களை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்கள் கைதுசெய்யப்படவேண்டும்,குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படNவுண்டும் என இதன்போது வலிறுத்தப்பட்டன.

கட்டவேண்டியது கைகளை அல்ல வெட்டவேண்டியது தலையை என்ற சோகத்தின் கீழ் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டதுடன் சிறுவர் சிறுமியர்களும் கலந்துகொண்டு தமது கண்டனத்தை பதிவுசெய்தனர்.

வன்புணர்வுக்கான தண்டனை மரணம் மட்டுமே,காடையர்களின் காமபசிக்கு நாங்கள் இரையா,பெண்கள் மீதான வன்முறையினை ஒழிப்போம்,சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்ககூடாது போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த நாட்டில் சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டுமானால் கடுமையான சட்டம் அமுல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் இங்கு முன்வைக்கப்பட்டதுடன் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் நீதிமன்றங்கள் கடுமையான நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது.