ஹோட்டலை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு –உரிமையாளர் பிணையில் செல்ல அனுமதி

மட்டக்களப்பு நகரில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை பொதுச்சுகாதார பிரிவினரினால் முற்றுகையிடப்பட்ட ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் மூடுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகளும் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று பிற்பகல் மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது இவை மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சென்ற புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் இவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது மலசல கூடத்திற்குள் இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு தொகை இறைச்சிகளையும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் நீதிமன்றில் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் ஹோட்டலை நடாத்தியது அனுமதிப்பத்திரம் இன்றி ஹோட்டல் நடாத்தியது ஆகிய இரு குற்றங்கள் பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் தாக்கல்செய்யப்பட்டது.

இது தொடர்பில் விசாரணை செய்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா,குறித்த ஹோட்டல் உரிமையாளரை 50ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும் இரு சரீரப்பிணையிலும் விடுவித்ததுடன் குறித்த ஹோட்டலை எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் மூடுமாறும் ஹோட்டல் சீர்செய்யப்பட்டு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்து அறிக்கையளித்தன் பின்னரே குறித்த ஹோட்டல் திறப்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவித்துள்ளதாக புளியந்தீவு பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமுதமாலன் தெரிவித்தார்.