பிள்ளையானின் மேல் முறையீட்டு நீதிமன்ற வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் வழக்கு ஜுன் மாதம் 07ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேல் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இன்று மீண்டும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி வை.எம்.வை.இஸ்ஸடீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிர்வரும் 07-06-2017 வரை வழக்கினை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் ரயலுக்கும் உத்தரவிட்டார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்ட்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 11.10.2015 அன்று சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டதுடன், ஏனைய 3 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.