கல்குடா மதுசார உற்பத்தி நிலையத்திற்கு எதிராக அணி திரளும் மதத்தலைவர்கள்

கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் எத்தனோல் மதுசார உற்பத்திசாலைக்கு எதிராக எதிர் வரும் 22.05.2017 திங்கட்கிழமை மட்டக்களப்பில் அமைதிப் பேரணியொன்றை நடாத்த சமதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட கிளை தீர்மானித்துள்ளது.

 சமதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் கூட்டம் சனிக்கிழமை (29.4.2017) மட்டக்களப்பு மறைமாவட்ட கல்வி மண்டபத்தில் நடைபெற்ற போதே இந்த தீர்;மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சமதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட கிளை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த கூட்டம் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி உட்பட சமய பிரமுகர்கள் சமதானத்திற்கான இலங்கை சமயங்களின் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் உறுப்பினர்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் எத்தனோல் மதுபான உற்பத்திசாலை தொடர்பாகவும் அதனால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்பு தொடர்பாகவும ஆராயப்பட்டது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அந்த குழுவின் அறிக்கையை வைத்து எதிர் வரும் 22.4.2017 அன்று மட்டக்களப்பு நகரில் ஒரு அமைதிப் பேரணியை நடாத்துவதெனவும் இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.