ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி -இருவர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை 30.4.2017) இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 காத்தான்குடியிலிருந்து ஆரையம்பதி பிரதேசத்திற்கு இரவு 11.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இவர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்றால் இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் பலத்த காயங்களுக்குள்ளான இந்த நான்கு இளைஞர்களும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சலீம் முகம்மட்; சப்னி (வயது 17) எனும் இளைஞர் இன்று (1.5.2017) திங்கட்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த இளைஞர் புதிய காத்தான்குடி விஸ்டம் வீதியில் வசிப்பவராகும்.

இச் சம்பவத்தில் காயமடைந்த ஏனைய மூன்று இளைஞர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.