மட்டக்களப்பில் உணர்வுபூர்வமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பிள்ளையார் ஆலய முன்றலில்; இன்று (18) காலை நடைபெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் விநாயகப் பெருமானுக்கு அபிசேகப் பூசை நடைபெற்று உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியை வேண்டி விஷேட பூஜை நடைபெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாகரைக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், ச.வியாழேந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாணசபை பிரதித் தவிசாளர் நி.இந்திரகுமார், உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, ம.நடராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான, பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் தமிழரசுக்கட்சிக் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உயிர் நீர்த்த அனைவருக்குமான அஞ்சலியைத் செலுத்தினர்.