மீதொட்டமுல்வில் உயிர் நீர்த்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி

மீதொட்டமுல்ல பகுதியில் ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று பகல் காந்தி பூங்கா முன்பாக மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

57வது நாளாகவும் காந்தி பூங்கா முன்பாக தொழில் உரிமைக்காக சத்தியாக்கிரக போராட்டம் மேற்கொண்டுவரும் பட்டதாரிகளே இந்த அஞ்சலி நிகழ்வினை நடாத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிருஷாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகச்சுடர் ஏற்பட்டு இரு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மீதொட்டமுல்லையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவான நிவாரணங்களைப்பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் துரித நடவடிக்கையெடுக்கவேண்டும் என இங்கு பட்டதாரிகளினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த பகுதி மக்களுக்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவேண்டும்.இல்லாதுபோனால் எமது போராட்டம் அவர்களுக்கு ஆதரவாகவும் நடாத்தப்படும் எனவும் பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.