மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக 56நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் மீது சிலர் அச்சுறுத்தல்களை விடுத்துவருவதன் காரணமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் எங்களது கோரிக்கையினை நிறைவேற்ற மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த அறவழி போராட்டத்தினை பட்டதாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

எனினும் சிலர் இரவு வேளைகளில் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு சென்று அச்சுறுத்தல் விடுத்துவருவதாக பட்டதாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தலைமையில் சென்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.