புனித மரியாள் பேராலயத்தில் பாஸ்கா வழிபாடுகள் -ஆயரினால் நடாத்திவைப்பு

கிறிஸ்தவர்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த உயிர்த்த ஞாயிறு இன்றாகும்.சிலுவையில் அறையப்பட்டு கொலைசெய்யப்பட்ட யேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் யேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

முட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த உயிர்ப்பு விசேட ஆராதனை நடைபெற்றது.

உயிர்ப்பு புதுவாழ்வு என்னும் விடயலுக்கு அனைவரையும் அழைத்துச்சென்றார்.பாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற இந்த பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டது.

இதன்போது நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.திருஒளி வழிபாடு,இறைவாக்கு வழிபாடு,திருமுழுக்கு வழிபாடு,நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நடைபெற்றது.

யேசுவின் உயிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.

இதன்போது விசேட திருப்பலியும் ஆயர் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.