மட்டக்களப்பில் கடலில் மூழ்கி இளைஞன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் கடலில் மூழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தார்.


இன்று மாலை புதுக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரத்தை சேர்ந்த ரி.இனேஸ்குமார்(21வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்தினருடன் புதுவருட பிறப்பினை நேற்று பிற்பகல் புதுக்குடியிருப்பு கடற்கரையில் கொண்டாடிக்கொண்டிருந்தபோது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்த நிலையில் கடற்கரையில் கதைத்துக்கொண்டிருந்தபோது அலையினால் குறித்த இளைஞர் அடித்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில் குறித்த இளைஞனை கடல் அலை நிலத்திற்கு கொண்டுவந்த நிலையில் உடனடியாக குறித்த இளைஞன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.