(லியோன்)
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக
புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அமைக்கப்பட்டுள்ள புற்றுநோயாளர் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலை சிகிச்சைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளைக்கொண்டதாக
அமைக்கப்பட்டள்ள இந்த சத்திர சிகிச்சை கூடத்தின் மூலம் இன்று தொடக்கம்
புற்றுநோயாளர்களுக்கான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் எம்.இப்றாலெப்பை தெரிவித்தார்.
சகல புற்றுநோய்களுக்குமான சத்திர
சிகிச்சைகள் இங்கு வழங்கப்படவுள்ளதாக விசேட மயக்க மருந்து வைத்திய நிபுணர் டாக்டர்
ச.மதனழகன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள
புற்றுநோயாளர்கள் இதன்மூலம் உயர்தரமான சத்திரசிகிச்சையினை பெற்றுக்கொள்ளமுடியும்
எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது முதல்முதலாக சத்திர
சிகிச்சைகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.விசேட சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்
சி.பிரணவன் ,விசேட புற்றுநோய் சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் கலன மென்டிஸ் ,புற்றுநோய்
சிகிச்சை பிpரிவு வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர்
ந.தனஞ்செயன் ,பொதுசத்திரசிகிச்சை பிரிவு பதிவாளர் டாக்டர் தி.பிரசாந்தன் ,மயக்கமருந்து
வைத்தியர் டாக்டர் நிமல்ராஜா உட்பட தாதியர்களும் இந்த ஆரம்ப நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக
புற்றுநோய் வைத்தியசாலை அமைக்கப்பட்டிருந்தபோதிலும் சத்திர சிகிச்சைகள் கொழும்பு போன்ற
பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் கிழக்கு மாகாணத்திற்கு முதன்முறையாக
அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வறுமை நிலையில் உள்ள
மக்கள் உரிய சிகிச்சையின்றி மரணிக்கும் நிலை இருந்துவந்த நிலையில் தற்போது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு
ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அந்த மக்கள் பெரும் நன்மையுடையும்
நிலையேற்பட்டுள்ளது.