மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் 25வருடத்திற்கு பின்னர் நடாத்திய பாடசாலைகளுக்கிடையான அஞ்சலோட்ட போட்டி

மட்டக்களப்பு மைக்கேல்மென் விளையாட்டுக்கழகம் 25 வருடங்களுக்கு பின்னர் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அஞ்சலோட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு மத்தியகல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி என்பன முதல் இடத்தினைப்பெற்றுள்ளதுடன் பெண்கள் பிரிவில் கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் முதலிடத்தினைப்பெற்றுக்கொண்டது.

இந்த அஞ்சலோட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஜேசுசபை துறவிகள் சமூகத்தின் உதவியுடன் மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்வி வலயத்துடன் இணைந்து இந்த போட்டியை ஏற்பாடுசெய்திருந்தது.

இந்த அஞ்சலோட்ட சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து 16க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

14வயது,16வயது,18வயது,20வயது ஆகிய பிரிவுகளில் இந்த அஞ்சலோட்ட சுற்றுப்போட்டி நடைபெற்றதுடன் 4ழூ400 மற்றும் 4ழூ100 ஆகிய பிரிவுகளில் இந்த அஞ்சலோட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவாக இந்த போட்டிகள் நடாத்தப்பட்டது.இதனடிப்படையில் பெண்கள் பிரிவில் முதல் இடத்தினை கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயமும் இரண்டாம் இடத்தினை புனித வளனார் பாடசாலையும் மூன்றாம் இடத்தினை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையும் பெற்றுக்கொண்டது.

ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு மத்தியகல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி என்பன முதல் இடத்தினைப்பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை சிவானந்தா தேசிய பாடசாலை பெற்றுக்கொண்டது.

இறுதி நிகழ்வானது மைக்கேல்மென் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அருட்தந்தை ரி.சகாயநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவிகள் சபையின் மேலாளர் அருட்தந்தை போல்சற்குணநாயகம் அடிகளார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோவிந்தராஜா,உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார் ஆகியோர் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக புனித மைக்கேல் கல்லூரியின் அதிபர் வெஸ்லியோ வாஸ் கலந்துகொண்டார்.

இதன்போது வெற்றிபெற்றவர்களுக்கான பதக்கங்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.