பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்ற பெரியகல்லாறு வடபத்திரகாளிம்மன் ஆலய தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்;டக்களப்பு, பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு உற்சவம் இன்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பழமையானதும் அற்புதங்கள் நிறைந்ததுமான இந்த ஆலயத்தின் திருச்சடங்கானது கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறையினையும் பண்பாட்டினையும் எடுத்துக்காட்டும் வகையில் நடாத்தப்பட்டுவருகின்றது.

ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கையொட்டி கடந்த பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் கொண்டுசெல்லும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றதுடன் ஆலய வருடாந்த திருச்சடங்கு ஆரம்பமானது.

ஐந்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கில் ஞாயிற்றுக்கிழமை வாழைக்காய் எழுந்தருளல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதுடன் திங்கட்கிழமை ஊர்காவல் திருவுலா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை சக்தி மாகா யாகம் நடைபெற்று நோற்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் நேற்று மாலை அம்பாளின் கடற்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இன்று காலை மூலமூர்த்தியாகிய அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தேவாதிகள் புடை சூழ தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தீமிதிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.