மட்டக்களப்பில் 147வது காந்தி ஜெயந்தி தினம் அனுஸ்டிப்பு

உலகிற்கு அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் 147வது காந்தி ஜெயந்தி தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பில் காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன.

இதனையொட்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலையருகில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சங்க தலைவர் எஸ்.கணேசராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி ரகுபதிராம் பாடல் இசைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் காந்தி ஜெயந்தி தினத்தினை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்வு நடைபெற்றது.