தான்தோன்றீஸ்வரனின் அருள் மழையாக பொழிய பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்ற தேர் உற்சவம்

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும் தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இறைவனின் ஆசி மழைத்துறலாக பொழிய சிவனார் பார்வதியுடன் தேர் ஏறிவந்த காட்சி அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
கடந்த சில மாதங்களாக கடுமையான சுட்டெரிக்கும் வெயில் இருந்துவந்தபோதிலும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர் உற்சவம் ஆரம்பமாகமுன்பு மழைபொழிந்து நிலமகளையும் மக்களையும் குளிர்வித்தது.

கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய அற்புத திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் விளங்குகின்றது.

கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டதாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் விளங்கி வருகின்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய வருடாந்த உற்சவத்தின்   தேரோட்டப்பெருவிழா இன்று மாலை  அடியார்களின் அரோகரா கோஷத்துடன் மிகவும் சிறப்பாக  நடைபெற்றது.

பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள்முறையே விநாயகர் தேர் , சித்திரத்தேர்வடம்பூட்டி ஆண் அடியார்களால் மட்டும் ஆலயவெளிவீதியில் முற்றும் மணல் தரையில் மிகவும் பக்திபூர்வமாக இழுக்கப்படும். இது எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர்பாரம்பரியபண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பது நோக்கத்தக்கது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் இந்த மஹோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.நாளை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.