சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் உணர்வுபூர்வாக அனுஸ்டிப்பு

சர்வதேசமே படுகொலைக்கான நீதியை வழங்கு என்னும் கோரிக்கையினை முன்வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரும் சோகமாக வர்ணிக்கப்படும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுகூரப்பட்டது.
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 1990.09.09. அன்று 186பேர் கைதுசெய்யப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட நினைவு நாள் வெள்ளிக்கிழமை நினைவு கூரப்பட்டது.

முன்னதாக பனிச்சையடி கண்ணகியம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் இந்த பூஜையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து தமது படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு நியாயம் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தியும் படுகொலைசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலிறுத்தியும் கவன ஈர்ப்பு பேரணியும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஈகச்சுடரும் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார்,இரா.துரைரெட்னம் உட்பட உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராணுவம் மற்றும் ஊர்காவல் படையினரே தமது உறவுகளை கைதுசெய்து படுகொலைசெய்ததாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சர்வதேச விசாரணையை கோரி மனித உரிமை அமைப்புக்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. சத்துருக்கொண்டானில் நடைபெற்ற படுகொலையில் 5 கைக்குழந்தைகள் 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85 பெண்கள் 28 முதியவர்கள் உட்பட 186 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.