மட்டக்களப்பில் கசிப்பு நிலையம் முற்றுகை –கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கேரளா கஞ்சா வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்;டதுடன் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும் முற்றுகையிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையில் முற்றுகையிடப்பட்டதுடன் அங்கிருந்த கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்கள் மற்றும் கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

அதேபோன்று மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கேரளா கஞ்சாவைத்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து 70 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதையற்ற இலங்கையை உருவாக்கும் வகையிலான விசேட போதையொழிப்பு திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் 446 சட்ட விரோத போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

இதன் மூலம் சுமார் 25 இலட்சம் ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் போதைப்பாவனையை தடுக்கும் வகையில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.