100 மதுபான போத்தலை கடத்தியவருக்கு நீதிபதி வைத்த ஆப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 100மதுபான போத்தல்களை சட்ட விரோதமான முறையில் கொண்டுசென்றவருக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா 40ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மதுபான போத்தல்களை நேற்று திங்கட்கிழமை அதிகாலை வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.

மட்டக்களப்பில் இருந்து தோணி ஊடாக இந்த மதுபான போத்தல்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ரி.நஸீர் தெரிவித்தார்.

குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது 40ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.