உணர்வுபூர்வமாக நடைபெற்ற சித்தாண்டியில் காணாமல்போனவர்கள் நினைவு கூரும் நிகழ்வு

மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.
சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இதனையொட்டி சித்தாண்டி சந்தியில் இருந்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஊர்வலம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம் வரையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,காந்திசேவா சங்க தலைவர் க.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990 ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் 1991ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 15வயது தொடக்கம் 50வயது வரையான சுமார் 100க்கும் மேற்பட்டோர் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டு காணாமல்போயிருந்தனர்.

இவர்கள் இதுவரையில் வீடு திரும்பாத நிலையில் குறித்த சம்பவங்களில் காணாமல்போன குடும்பங்களினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.