தமிழர்கள் தீர்வினைப்பெற்றுவிடக்கூடாது என்பதில் கூட்டு எதிர்க்கட்சி தீவிரம் -யோகேஸ்வரன் எம்.பி.

தமிழ் பேசும் மக்கள் எதிர்காலத்தில் நியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்ள இடமளிக்ககூடாது என்பதில் இந்த கூட்டு எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி கண்ணகிவித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வண.வி.சிறிபால்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடுசெய்யப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா செலவில் இந்த சுற்றுமதில் அமைக்கப்படவுள்ளது.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஒன்று பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளது.எதிர்வரும் காலங்களில் நாங்கள் தமிழர்கள் நியாயமான தீர்வினைப்பெற்று எங்களது அபிலாசைகள் தீர்க்கப்படக்கூடாது என்பதில் இந்த கூட்டு எதிர்க்கட்சி மிகவும் தீவிரமாகவுள்ளது.

நல்லாட்சி என்னும் தேசிய அரசாங்கத்தினை கவிழ்க்கவேண்டும் என்ற ரீதியில் மிகவும் தீவிரமாக செயற்பட்டுவருகின்றது.எனவே தமிழ் பேசும் சமூகத்தின் எமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும்.

இவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டுள்ள இவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் ஆதரவினை வழங்கவேண்டாம்.ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டாம் என இந்த நாட்டின் தேசிய இனமாக இருக்கின்ற தமிழ் பேசும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த நல்லாட்சியில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,இந்த ஆட்சிக்காலத்திலேயே கல்விக்காக அதிகமான நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.கடந்த ஆட்சிக்காலங்களைவிட மிக அதிகமான நிதி கல்விக்கு இந்த ஆட்சிக்காலத்திலேயே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 1100 பாடசாலைகளில் அரைவாசிக்கு மேற்பட்ட பாடசாலைகள் இந்த நிதி மூலம் அபிவிருத்திசெய்யப்படும் என எதிர்பார்க்கின்றேன்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக ஒருநியாயமான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்காக பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுவந்துள்ளது.தமிழ் மக்களில் சிலர் அதனை உணராமல் இருக்கும் நிலையே இருந்துவருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் என்னை விலைபேசினார்கள்.கோடிகள் தருகின்றோம் என்று கூறினார்கள்.அமைச்சு தருகின்றோம் என்று பல ஆசைவார்த்தைகளை கூறினார்கள். ஆனால் அவற்றுக்கு நாங்கள் இசைந்து செல்லவில்லை.

தமிழ் மக்கள் இந்த மண்ணில் தலைநிமிர்ந்துவாழவேண்டும் என்பதற்காக இந்த மண்ணில் எமது உறவுகள் தங்களது உயிர்களை துச்சமாக நினைத்து பல தியாகங்களை புரிந்துள்ளார்கள். இந்த தியாகங்களை நாங்கள் எப்போதும் கொச்சைப்படுத்தமாட்டோம்.அதற்காகவே நாங்கள் செயற்பட்டுவருகின்றோம்.அவ்வாறு செயற்படுவதன் காரணமாக பல அபிவிருத்திகளை செய்யமுடியாத வகையில் நாங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளோம்.

எமக்கு நல்லகாலம் ஒன்று நிச்சயமாக உதயமாகும்.நாங்களே எமது பகுதிகளில் முழுமையான அபிவிருத்தியை மேற்கொள்ளும் காலம் மிகவும் நெருங்கிவிட்டது.அதற்காக தமிழ் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசிமாயக தேவையாகவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் கொள்கையினை நிறைவேற்றும் வகையிலேயே செயற்பட்டுவருகின்றது.அபிவிருத்தியை விட எமது அபிலாசைகள் மிகமுக்கியத்துவமானது.அதனை நிறைவேற்றும் பாதையில் நாங்கள் சென்றுகொண்டுள்ளோம்.