பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இராமயன போர் நிறைவுபெற்றதும் யுதத்தின்போது போது இராமபிரானால் கொல்லப்பட்டவர்களின் பிதிர்களினால் பிரம்மகத்தி தோசத்தினால் பீடிக்கப்பட்ட இராமன் மாமாங்கம் வந்து தீர்த்தக்கேணியை உருவாக்கி சிவலிங்க வழிபாடு மேற்கொண்டதாகவும் இதன்போது பிதிர் தோசம் நீங்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

அத்துடன் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இறுதி உற்சவமான ஆடிஅமாவாசை தீர்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு சுவாமி கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

பூஜையினை தொடர்ந்து அடியார்களின் அரோகரா கோசத்துடன் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
இந்த தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தாய்தந்தையர்களை இழந்தவர்கள் தமது பிதிர்கடன்களையும் நிறைவேற்றினர்.