கொக்கட்டிச்சோலை விபத்தில் முதியவர் பலி-இருவர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.00மணியளவில் மாவடிமுன்மாரி ஏற்றம் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் போட்டிபோட்டி ஓடிய நிலையில் வீதியின் அருகில் நின்ற முதியவர் ஒருவரை மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மோட்டார் சைக்கிளை செலுத்திய இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.