ஏறாவூர் வாவியில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

தொழிலாளி ஒருவர் வெள்ளிக்க்pழமை பகல் ஏறாவூர் வாவியில் மூழ்கி மரணமாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் அப்துல் மஜீத் மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய மஹ்மூது லெப்பை அன்சார் என்பவரே வாவியில் வீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி மரணித்தவராகும்.

சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கூலித் தொழிலாளியான இவர் வெள்ளிக்கிழமை பகல் அறுக்கப்பட்ட கோழிகளின் கழிவுகளை எடுத்துக் கொண்டு ஏறாவூர் வாவிக் கரையோரமாகவுள்ள குப்பைத் திடலில் கொட்டுவதற்காகச் சென்றுள்ளார்.

அவற்றைக் குப்பைத் திடலில் கொட்டிவிட்டு அருகிலுள்ள வாவியில் கோழிக் கழிவுகளை எடுத்துச் சென்ற சாக்குகளையும் கைகால்களையும் கழுவுவதற்குச் வாவிக் கரைக்குச் சென்று கழுவிக் கொண்டிருக்கும்போது மயங்கி வாவிக்குள் வீழ்ந்துள்ளார்.

பின்னர் வாவியில் சடலம் ஒன்று ஒதுங்கியிருப்பது பற்றி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் அதுபற்றி விசாரித்தபோது மேற்படி கூலித் தொழிலாளியை உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.