பல்லியை சமைத்த உணவகத்துக்கு மூடுவிழா –ஆரையம்பதியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர்  வாங்கிய சாப்பாட்டு பார்சலுக்குள் இறந்த நிலையில் பல்லி ஒன்று இருந்துள்ளது.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜுன் 28, 2016) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஆரையம்பதி, பிரதான வீதி பொதுச்சந்தை முன்னால் அமைந்துள்ள உணவகத்தில் பெண் ஒருவர் மதிய உணவுப் பார்சல் ஒன்றை வாங்கி கொண்டு வீடு சென்று உட்கொள்ளும் வேளையில் கறிக்குள் இறந்த நிலையில் பல்லி இருந்ததை கண்டுள்ளார்.

இதனை அடுத்து அப்பெண்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அறிவித்ததையடுத்து பொலிஸாருடன் குறித்த உணவகத்துக்கு விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு குறித்த உணவகமும் அதிகாரிகளினால் பூட்டப்பட்டது.

குறித்த உணவு விடுதி உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.