சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை –தாயின் சகோதரி கைது –ஏறாவூரில் சம்பவம்

சகோதரிகளான சிறுமிகள் இருவருக்குச் சித்திரவதை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அந்த சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்து வந்த சின்னம்மா (தாயின் சகோதரி) புதன்கிழமை 01.06.2016 மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சகோதரிகளான 8 வயது மற்றும் 10 வயதுடைய சிறுமிகள் இருவர் வீடொன்றில் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக சிறுவர் நன்நடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஏறாவூர் நகரிலுள்ள குறித்த வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் சிறுமிகளைப் பரிசோதித்த போது அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுவருவதற்கான உடற் தழும்புகளுடன் புதன்கிழமை 01.06.2016 சிறுமிகளை மீட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் இருவரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுமிகளின் பராமரிப்பாளராக இருந்துவந்த அவர்களது தாயின் சகோதரியும் மற்றும் அவரது உறவினர்களும் தொடர்ந்து சிறுமிகளின் மீது சித்திரவதையை மேற்கொண்டு வந்துள்ளது பற்றி சிறுமிகள் வாக்குமூலமளித்துள்ளனர்.

இந்த சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் தாய் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது இந்தச் சிறுமிகளை தனது தங்கையிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றதாக சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.