மட்டக்களப்பு வலயத்தில் கல்லடி உப்போடை விவேகானந்தா மீண்டும் சாதனை –சிவானந்தா ஆண்கள் பிரிவில் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயமட்ட விளையாட்டு விழாவில் பெண்கள் பிரிவில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயமும் ஆண்கள் பிரிவில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய மட்ட விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வு நேற்று மாலை வெபர் விளையாடடு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதி கல்விப்பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பலர் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டு விழாவின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் விளையாட்டுத்துறைக்கு அர்ப்பணிப்புமிக்க பங்களிப்பினையாற்றிய முன்னாள் விளையாட்டு வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

வலய மட்ட போட்டிகளின்போது வெற்றிபெற்ற மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு வெற்றிக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் பெண்கள் பிரிவில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயம் 325 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினையும் இரண்டாம் இடத்தினை மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி 196 புள்ளிகளைப்பெற்றுக்கொண்டதுடன் மூன்றாம் இடத்தினை 182 புள்ளிகளுடன் வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலையும் பெற்றுக்கொண்டது.

ஆண்கள் பிரிவில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை390 புள்ளிகளைப்பெற்று முதல் இடத்தினையும் புனித மைக்கேல் கல்லூரி 268 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தினையும் மைலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயம் 99புள்ளிகளைப்பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.