ஏறாவூர் தளவாய்பகுதியில் மாதிரி பண்ணை இனந்தெரியாதவர்களினால் தீக்கிரை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் உள்ள இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் பராமரிக்கப்பட்டுவந்த மாதிரி பண்ணையொன்று இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு தீயிடப்பட்ட இந்த பண்ணையின் தீ இன்று பிற்பகல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இனந்தெரியாதவர்கள் சிலர் இந்த தீயை வைத்துள்ளதாக குறித்த பண்ணையினை பராமரிப்பவர் தெரிவித்தார்.

இளைஞர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இளைஞர்களின் வலுவாக்கும் திட்டத்திற்கு அமைவாக ஏறாவூர்ப்பற்று பிரதேசசெயலகத்தில் குத்தகை அடிப்படையில் இந்த காணி பெறப்பட்டு அதில் பழமர செய்கை,தென்னை,மரக்கறி செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் மகா போகத்தில் நெல்செய்கையும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை(30)சிலர் குறித்த பண்ணைக்குள் நுழைந்து காவலாளியை மிரட்டியுள்ளதுடன் பண்ணையில் சேதங்களையும் ஏற்படுத்தியிருந்ததாக குறித்த பண்ணையில் கடமையாற்றிவருவோர் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த பண்ணையில் தீவைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.இதனால் நடப்பட்டிருந்த பயன்தரு மரங்கள் அழிவடைந்துள்ளதாகவும் குறித்த பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் மற்றும் குறித்த பிரதேசங்களை சேர்ந்தவர்களுடன் தீயினை கட்டுப்படுத்தியதுடன் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.