பிரசாந்தனுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

மட்டக்களப்பு,ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் முறைப்பாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் மற்றும் அவரது சகோதரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை பிரசாந்தனுக்கு பிணை மனு கோரி மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 28ஆம் திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

2008 ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரும் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினரான பூ. பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.