பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்றங்ளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதனால் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி இந்த விளக்கமறியல் நீடிப்பினை எதிர்வரும் 20ஆம் திகதி வரை வழங்கியுள்ளார்.

இன்று காலை காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.