ஊடக சுதந்திரத்தினை பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கம் முன்வரவேண்டும் -ஊடகவியலாளர்கள் கோரிக்கை

நல்லாட்சியில் ஊடவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கருத்து சுதந்திரத்தினை இல்லாமல் செயற்பாடுகள் கவலைக்குரியது என ஊடவியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடவியலாளர் எஸ்.நிலாந்தன் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் சிவில் நிர்வாக சீர்கேடு தொடர்பில் கருத்தினை பதிவுசெய்தது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நிலாந்தன் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த விசாரணை நடைபெற்றதுடன் வாக்கு மூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஊடகவியலாளர்கள் எழுதும் செய்தியோ,கட்டுரையோ தொடர்பில் பொலிஸ் நிலையம் அழைக்கமுடியாது.அது தொடர்பான வழிமுறைகள் இருக்கும்போது மாவட்ட அரசாங்க அதிபருக்கு சார்பான முறையில் மட்டக்களப்பு பொலிஸார் செயற்படுவதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர் நிலாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடவியலாளர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அது தொடர்பில் குரல்கொடுக்க யாரும் முன்வராதது கவலைக்குரியது என தெரிவித்த அவர் சில ஊடகவியலாளர்கள் சங்கத்தில் அரச துறையில் கடமையாற்றுவோர் முக்கிய பதவிகளில் இருப்பதனால் அவர்கள் அரச அதிபருக்கு எதிராக செயற்படமுன்வரவில்லையெனவும் தெரிவித்தார்.

எனினும் தமக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக குரல்கொடுத்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கு தனது நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஊடக அடக்குமுறை புதிதல்ல.மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரினால் மூன்றாவது ஊடகவியலாளராக நான் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளேன்.இது கருத்து சுதந்திரத்திற்கும் எனது கருத்து சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அமைகின்றது.

தன்னை அரச அதிபருடன் சென்று சமாதானமாகி அவருடன் இணைந்து பணியாற்றுமாறும் அரச அதிபருக்கு எதிராக எவ்வாறு எழுதமுடியும்.அவரிடம் சென்றுவிட்டு வந்து வாக்குமூலங்களை பதிவுசெய்யுங்கள் என்று என்னை பொலிஸார் கோரினர்.நான் அதனை மறுத்ததுடன் இது ஊடக சட்டத்திற்கு அமைவாகவே நடந்துகொள்வேன் என கோரியபோது எனது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இரண்டு பிரிவாக பிரிந்துள்ளார்கள் என்பது இன்றைய நிகழ்வுகள் மூலம் அறியகிடைத்தது.ஒன்று அரசாங்க அதிபருக்கு சார்பாக ஒரு தரப்பினரும் ஒரு தரப்பினர் ஊடகவியலாளர்களுக்கு சார்பாகவும் இருப்பதை காணமுடிகின்றது.

அரச நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டு ஊடகங்களில் பணியாற்றுபவர்கள் அரச அதிபருக்கு சார்பாக கருத்துகளை முன்வைப்பதும் எனது செய்திகளை இருட்டடிப்பு செய்வதுமாக இருந்தார்கள்.ஆனால் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஊடகவியலாளரை பொலிஸ் நிலையம் அழைக்கமுடியாது என தனது கண்டனத்தினை தெரிவித்திருந்தது.