ஆலய விக்கரங்களை திருடியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் காளிகோயிலில் வைக்கப்பட்டிருந்த பித்தளை விக்கிரகங்களைத் திருடிய குற்றச்சாட்டுத் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில்  இளைஞர் ஒருவரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேற்படி கோயிலின் பூசாரி பொலிஸ் நிலையத்தில் ஞாயிறன்று செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அதே இடத்தைச் சேர்ந்த 19 வயது  இளைஞன் அன்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளான்.

மேலும் இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, கடந்த சித்திரைப் புத்தாண்டு சமய நிகழ்வுகளுக்குப் பின்னர் பூட்டப்பட்ட கோயிலை ஞாயிறன்று சென்று பார்த்தபோது அதன் கதவுகள் திறந்திருக்கக் காணப்பட்டுள்ளன. பூட்டுக்களும் உடைக்கப்பட்டிருந்தன.

மேலும், கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பித்தளையினால் செய்யப்பட்ட இரண்டு விக்கிரகங்கள் காணாமல் போயிருந்தன.

இது பற்றி உடனடியாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார்  இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.