கிராமசேவையாளர் கொலை –கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர் பிரதேசத்தில் கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நேற்று இரவு 9.00மணியளவில் மகிழூர்,கேணி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மின்சார தூணில் மோதிய நிலையில் அதில் பயணம்செய்த கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

உயிரிழந்தவர் ஓந்தாச்சிமடம் பகுதியில் கிராம சேவையாளராக கடமையாற்றிவரும் மகிழூர் பகுதியை சேர்ந்த சு.விக்னேஸ்வரன் (33வயது) என்பவர் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இவர்களை குறித்த பிரதேசத்தில் சிலர் கடுமையாக தாக்கிய நிலையிலேயே தூணில் மோதியுள்ளதாகவும் குறித்த கிராம சேவையாளரின் தலையின் பின்புறத்தில் கடுமையான தாக்குதல் நடாத்தபபட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட தடவியல் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த கிராம சேவையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை குறித்த கிராம சேவையாளருடன் சென்று படுகாயமடைந்த ஏ.பிரகலாதன் என்னும் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு;ளளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த கிராம சேவையாளரின் மரணம் தாக்குதலினால் ஏற்பட்டதா,விபத்தினால் ஏற்பட்டதா என பிரேத பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் நேற்று சனிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.றிஸ்வியின் இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.